Published : 22 Oct 2019 09:34 PM
Last Updated : 22 Oct 2019 09:34 PM
பேருந்தில் வெளியூர் சென்று திரும்பியபோது சிபிஐ அதிகாரி என நம்ப வைத்து பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் 5 சவரன் தங்கச் செயினை திருடிய நபரை போலீஸார் பொறிவைத்து பிடித்தனர்.
திருப்பத்தூரை சேர்ந்தவர் கோமதி (26). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎச்டி ஆராய்ச்சிப்படிப்பு படித்து வருகிறார். சொந்த ஊர் சென்றிருந்த அவர் கடந்த 11-ம் தேதி இரவு திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு பேருந்து மூலமாக சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பக்கத்து சீட்டில் டிப்டாப் நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். மிகவும் டீசண்டாக பழகிய அவர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார். சற்று நேரத்திலேயே கோமதியின் மதிப்பையும் நட்பையும் பெற்றார். வழி முழுதும் குற்றவாளிகளை எப்படி எல்லாம் பிடித்தோம் என கதை அளந்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கோமதிக்கு உறக்கம் வந்துள்ளது. சிபிஐ அதிகாரியும் உறங்குவதுபோன்று நடித்துள்ளார். பேருந்து அதிகாலையில் ஒரு இடத்தில் நிற்கையில் தூக்கத்திலிருந்து கோமதி கண் விழித்துள்ளார். அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த சிபிஐ அதிகாரி சீட்டில் இல்லை.
நல்ல மனிதர் நாம் தூங்குகிறோம் என்று தொல்லை கொடுக்கவேண்டாம் என்று சொல்லாமல் சென்றுவிட்டார் என்று நினைத்தப்படி தனது கைப்பையை எடுத்து பார்த்த கோமதிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவரது கைப்பையில் வைத்திருந்த 5 சவரன் செயின், செல்போன், பணம் காணாமல் போயிருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கோமதி அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரைப்பெற்ற போலீஸார் கோமதியின் அருகில் அமர்ந்திருந்த சிபிஐ அதிகாரி குறித்து பேருந்து நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். ஆனால் துப்பு எதுவும் துலங்கவில்லை. கோமதியின் திருடப்பட்ட செல்போனை போலீஸார் டிராக் செய்ய அவர் அதிலிருந்த சிம்கார்டை எடுத்துவிட்டு வேறொரு சிம்கார்டை போட்டு பயன்படுத்துவது தெரியவந்தது.
இதுபோதாதா? அழகாக செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்து அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருப்பத்தூரை சேர்ந்த ஜோசப் ஸ்ரீவத்சவ் (33)என்பதும், சிபிஐ அதிகாரி, மின் வாரிய அதிகாரி எனக்கூறி பலரையும் இதே போன்று ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
ஜோசப் ஸ்ரீவத்சவ் மீது சென்னை, குமரன் நகர் காவல் நிலையத்தில் பணமோசடி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கோமதியின் 5 சவரன் நகையை பறிமுதல் செய்ததுடன் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT