Published : 22 Oct 2019 03:33 PM
Last Updated : 22 Oct 2019 03:33 PM
சென்னை
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தமிழகத்தில் பரவலாக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தொடங்கிய நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக தமிழகம் தெற்கு ஆந்திரக் கடலோர மாவட்டங்கள்,கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை இருக்கும். இதில் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் பரவலாக கனமழையும் ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கடலோர கர்நாடகா, புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் ஆகிய இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவை நோக்கிச் சென்றதால், எச்சரித்தபடி அதீத கனமழைக்கான வாய்ப்பு இல்லை. எனவே தமிழகத்தில் மிக அதீத கனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது.
பொதுவாக ரெட் அலர்ட் என்பது பொதுமக்களுக்கான எச்சரிக்கை அல்ல. அது அரசு நிர்வாகத்துக்குள் முன்னெச்சரிக்கைக்காக அளிக்கப்படும் ஒரு அலர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT