Published : 22 Oct 2019 03:28 PM
Last Updated : 22 Oct 2019 03:28 PM

படிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை

தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கக் கூடாது எனவும் இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில் இன்று (அக்.22) அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சித் திட்ட விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மொழித் திணிப்பு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனக் கூறினார்.

"நம் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கை இருமொழிக் கொள்கை. தமிழ்நாட்டுக்கு தமிழ்தான் முதன்மை மொழி. இணைப்பு மொழி ஆங்கிலம். இந்தியைத் திணிக்கக் கூடாது. இந்தியா என்பது கூட்டமைப்பு. மொழித் திணிப்பு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை," என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், பூரண மதுவிலக்கு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மது என்பதே கூடாது என்பதுதான் அரசின் கொள்கை. அதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், ஒரே நாளில் மதுவை ஒழிக்க முடியாது. படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும். உடனடியாக மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்," என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x