

சென்னை
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பு ஏற்படுகிறது. அரசு குட்காவில் காட்டிய தீவிரத்தை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் காட்டுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக பேட்டி அளித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டார். அங்குள்ளவர்களிடம் குறைகளைக் கேட்டார். பின்னர் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அரசு இன்னமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. தமிழகம் முழுவதும் 2000 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்கள் கூட இறந்திருப்பது வேதனையாக உள்ளது.
எனவே, அரசு முழு கவனத்தையும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் செலுத்த வேண்டும். குட்காவில் காண்பித்த தீவிரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் காண்பிக்க வேண்டும். நிலவேம்பு கஷாயம் டெங்குவை குணப்படுத்தும் என்பதால் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் தொடர்ந்து வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றைய தினம் நூலகத்தைப் பார்வையிட்டு உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். அப்போது அங்கிருந்த பலர் நூலகத்தில் உள்ள குறைகளை என்னிடம் தெரிவித்தனர். அண்ணா நூலகத்தை இனி அரசியலாக்காமல் அரசு முறையாகப் பராமரிக்க வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.