இரு தினங்களுக்கு மழை தொடரும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை

அடுத்த இரு தினங்களுக்கு கனமழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் இன்று (அக்.22) வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணிநேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த கற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நிலவுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மிக கனமழையும், சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் 22, 23 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மழை தொடரும்".

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in