Published : 22 Oct 2019 09:53 AM
Last Updated : 22 Oct 2019 09:53 AM

'பிகில்' கதைத் திருட்டு வழக்கு: இன்று பிற்பகல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை

‘பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாவதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணியில், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பிகில்’. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பு மற்றும் மிகுந்த பொருட்செலவுக்கு இடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு அவருக்கு சிக்கலைத் தந்தது. அந்தக் கல்லூரிக்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இன்னும் பல சிக்கல்களை பட வெளியீட்டில் 'பிகில்' படக்குழு சந்தித்தது. தற்போது அனைத்தையும் முறியடித்து வெற்றிகரமாக தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பிகில்' படத்துக்கு மற்றொரு சிக்கலாக படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் கே.பி.செல்வா தொடர்ந்த வழக்கு உள்ளது. கதை தன்னுடயது, கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையைத் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்ததாகவும் உதவி இயக்குநர் கே.பி.செல்வா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், அட்லீ இயக்கும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடைய கதையை ஒத்திருப்பதை அறிந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததாகவும், அந்தப் புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே கதைத் திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ளமுடியும் என கூறி தன்னுடை புகாரை நிராகரித்ததால், 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்குத் தடை கோரியிருந்தார்.

இயக்குநர் அட்லீ, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராகச் சேர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த விவகாரம் காப்புரிமை தொடர்பாக இருப்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதால், உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக கே.பி.செல்வா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உதவி இயக்குநர் கே.பி.செல்வா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 15-ம் தேதி நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் அட்லீ மற்றும் உதவி இயக்குநர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய விசாரணையில் 'பிகில்' படத்தின் கதை, 2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில்தான் பதிவு செய்துள்ளார் என அட்லீ தரப்பில் வாதிடப்பட்டது. காப்புரிமை மீறியதாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கூறவில்லை. பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

தான் விளம்பரம் மற்றும் பணத்துக்காக வழக்கு தொடரவில்லை. படப்பிடிப்பு தொடங்கும்போதே கதை என்னுடையது என்று வழக்குப் பதிவு செய்தேன் என உதவி இயக்குநர் கே.பி.செல்வா தரப்பில் வாதிடப்பட்டது. தங்கள் தரப்பு பதிலைக் கேட்காமல், வழக்கை வாபஸ் பெறுவதாக உதவி இயக்குநர் தரப்பு கூறியதை கீழமை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது சரியல்ல என அட்லீ தரப்பில் வாதிடப்பட்டது.

கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி பட நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்கும் முன், வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் கீழமை நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி சுரேஷ்குமார், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் எடுத்த முடிவு சட்டவிதிகளுக்கு உட்பட்டதாக உள்ளதா? என முடிவெடுக்க இருப்பதாகக் கூறி வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பில் கீழமை நீதிமன்றம் அனுமதி அளித்த விவகாரம் மற்றும் ‘பிகில்’ கதை விவகாரம் இரண்டுக்குமான தீர்ப்பாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x