Last Updated : 21 Oct, 2019 04:40 PM

 

Published : 21 Oct 2019 04:40 PM
Last Updated : 21 Oct 2019 04:40 PM

சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு நீர் திறப்பு இல்லை: காத்திருப்புப் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

சிவகங்கை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையிலும்கூட சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு நீர் திறப்பு இல்லாததால் நாளை(அக்.22) முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் பெரியாறு விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஆண்டு ஆக.,20-ம் தேதி வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டும், விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மூன்று மாதங்களுக்கு பிறகே சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தாண்டு அக்.9-ம் தேதி முதல்போக சாகுபடிக்கு 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,130 கன அடி பெரியாறுநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தண்ணீர் திறந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் இதுவரை சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு சொட்டுகூட திறக்கவில்லை. இதனைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சிவகங்கை அருகே சோழபுரத்தில் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருமலை விவசாயி அய்யனார், "வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு பெரியாறுநீர் திறக்கும்போதே சிவகங்கை மாவட்டத்திற்கும் திறக்க வேண்டும். ஆனால் இதுவரை தண்ணீர் திறக்கவில்லை.

மேலும் மதுரை மாவட்டத்தில் விதிமுறையை மீறி விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்கின்றனர்.

அதிகாரிகள் தண்ணீரை விலைக்கு விற்பதால் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ஒருபோகத்திற்கே கையேந்தும் நிலை உள்ளது" என்றார்.

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதலில் நேரடி கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் இருப்பை பொறுத்து படிப்படியாக திறக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x