Published : 21 Oct 2019 02:28 PM
Last Updated : 21 Oct 2019 02:28 PM
மதுரை
தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையும், உள்ளாட்சித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் கொசுவைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு மருந்து, ரத்தம் தயார் நிலையில் வைக்கவும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கவும், தொடர்ந்து 24 மணிநேரம் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் இன்று (திங்கள் கிழமை) விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், "டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையடுத்து சுகாதாரத்துறையும், உள்ளாட்சித்துறையும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு உற்பத்தியையும், டெங்கு காய்ச்சலையும் கட்டுபடுத்தலாம். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT