Published : 21 Oct 2019 12:36 PM
Last Updated : 21 Oct 2019 12:36 PM

தென் மாவட்டங்களில் கனமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழையை ஒட்டி முன் தயாரிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்குப் பருவமழை முடிந்து தமிழகத்தில் கடந்த 17-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த வரும் 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் நல்ல மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஓமன் கடற்பகுதி நோக்கிச் செல்லவும் வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு திசைக் காற்று கிழக்கு நோக்கி இழுக்கப்படுவதால், அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் இரவு நேரத்தில் தொடங்கி காலை வரை வழக்கம்போல் மழை இருக்கும். தென் மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்துவரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நிவாரண மையங்களில் மக்களைத் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும், அதற்கான முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும், பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x