Last Updated : 21 Oct, 2019 11:51 AM

 

Published : 21 Oct 2019 11:51 AM
Last Updated : 21 Oct 2019 11:51 AM

நாங்குநேரி இடைத்தேர்தல் துளிகள்: வாக்குச்சாவடியில் கைகுலுக்கிக் கொண்ட அதிமுக - காங்கிரஸ் வேட்பாளர்கள்

நாங்குநேரி

நாங்குநேரியில் வாக்களிக்க வந்த அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும், வாக்குச்சாவடியைப் பார்வையிட வந்த காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் பரஸ்பரம் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.

நாங்குநேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9.30 மணியளவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், ரெட்டியார் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மேற்கு கட்டிடத்தில் வாக்களித்தார். அப்போது, வேட்பாளர் என்ற முறையில் வாக்குச்சாவடியை ஆய்வு செய்ய வந்தார் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்.

ஒரே இடத்தில் எதிர்பாராதவிதமாக இருவரும் சந்திக்க நேர்ந்த நிலையில் வேற்றுமை பாராட்டாமல் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் ஒருவொருக்கொருவர் கைகுலுக்கி நலம் விசாரித்து, வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் காஞ்சிபுரத்தில் வசிப்பதால் அவருக்கு இங்கு ஓட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 11 மணி வரை நங்குநேரியில் 23 89% வாக்குகள் பதிவாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x