ஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும்  புகார்

ஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும்  புகார்
Updated on
1 min read

புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் ஹெல்மெட் விவகாரம் சர்ச்சையை கிளப்ப தொடங்கியுள்ளது. ஆளுநர் கிரண்பேடி முதல்வர் மீதும், முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் மீது மாறி, மாறி டிவிட்டரில் புகார் தெரிவித்துள்ளனர். டிஜிபியிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஹெல்மெட் பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது.துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீஸார் முன்பு கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இவ்விவகாரத்தில் கிரண்பேடிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் அவர் இவ்விஷயத்தை தேவைப்படும்போது மட்டும் கிளப்புவார்.

இச்சூழலில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி போட்டியிடும் கட்சிகள் இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர்.இது தொடர்பான செய்திகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியானது.

இதனை வைத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதுதொடர்பான படங்களை பதிவிட்டு வாட்ஸ்அப்பில் நேற்று கூறியதாவது: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ததுள்ளனர். இங்கு சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது, விதிமீறியோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கையை புதுச்சேரி காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இப்புகைப்படங்கள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கும் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல்வரும் பதில் குற்றச்சாட்டு

இதையடுத்து முதல்வர் நாராயணசாமி டிவிட்டரில், கிரண்பேடி ஏற்கெனவே ஹெல்மெட் அணியாமல் பயணித்த படத்தையும், டூவீலர் ஓட்டுபவர் ஹெல்மெட் அணியாமல் இயக்கி கிரண்பேடி பின்னால் அமர்ந்திருக்கும் படத்தையும் பதிவிட்டார். அதில் ஒரு கருத்தை கூறும் முன்பு தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பாருங்கள் என்று கருத்திட்டிருந்தார். முதலில் சாலை விதியை மீறிய கிரண்பேடி மீது புதுச்சேரி டிஜிபி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

செ. ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in