

உதகை
பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்க்கும் சக்தி, உறுதி மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உள்ளது என எம்பி டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதகையில் இன்று நடந்தது.விழாவுக்கு மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் மத்தியக்குழு உறுப்பினரும், எம்பியுமான டி.கே.ரங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழா இந்தாண்டு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது.
கடந்த நூறாண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய பல பேராட்டங்கள் விளைவாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் வகுப்புவாதம் இந்திய நாட்டின் வரலாற்றை பின்னுக்கு தள்ளக்கூடிய ஒரு பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது.
இதன் மூலம் பொருளாதார, சமூக கொள்கை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
இதலிருந்து இந்திய நாட்டை அரசியல் சாசனம், மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே உள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் ஜனநாயக இயக்கங்களை ஒன்றுப்படுத்த முடியும். தமிழகத்திலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருதற்கான ஒளியை உருவாக்க முடியும்.
முற்போக்கு இயக்கங்கள் தெற்கிலிருந்து வடக்கும் செல்லும் முயற்சி இந்த நூறாவது ஆண்டு விழாவில் கொண்டு வருவோம்.
பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடைகளில் வியாபாரம் இல்லை. மக்களிடம் பணம் புழக்கம் இல்லை.
இப்படிப்பட்ட பொருளாதார, சமூக நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மா.கம்யூ கட்சி இந்த நூற்றாண்டு விழாவை பயன்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் படித்தவர்களை கம்யூனிஸ்ட் இயக்கம் வரவேற்கிறது.
எதிர்கட்சிகளை இல்லாமல் செய்யும் பணியை பாஜக செய்து வருகிறது. ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு இனம் , ஒருகட்சி என்ற நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. இந்த நாட்டில் உள்ள கலைகள், கலாச்சாரம், உணவு முறை, பழக்கங்கள் வேறு வேறு. மேல் தட்டு மக்களின் பிரமையை உருவாக்க நினைக்கின்றனர். ஆனால், பாஜகவின் இந்த முயற்சி சாத்தியமாகாது.
பல எதிர்க்கட்சிகள் இருந்தாலும், இடது சாரிகளால் தான் இதை தடுத்த முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த பணியை தொடங்கியுள்ளது. பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்க்கும் சக்தி, உறுதி மா.கம்யூனிஸ்ட்க்கு மட்டுமே உள்ளது.
இந்தியா முழுக்கவே பாஜக வீழ்ச்சியடையும்.
திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்த பணத்துக்கான வரவு செலவு கணக்கு வருமான வரித்துறையிடம் உள்ளது. அந்த கணக்குகளை வைத்து பல கதைகளை புனைகின்றனர். தேர்தல் கணக்குகள் தேர்தல் அதிகாரிகளிடம் உள்ளன. அதை மீறி எந்த பணமும் எங்களிடம் கிடையாது. நூறாண்டுகளாக இத்தகைய அவதூறுகளை தாண்டி தான் கம்யூனிஸ்ட் கட்சி வந்துள்ளது என்றார்.
விழாவில், மா.கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.பத்ரி, டி.ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்.டி.சிவசங்கர்