Published : 19 Oct 2019 09:28 PM
Last Updated : 19 Oct 2019 09:28 PM
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கடந்த 16 ஆண்டுகளில் 15,000 சட்டவிரோத கருக்கலைப்பு சிகிச்சைகளைச் செய்ததாக ஆனந்தி (52) என்ற போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.கந்தசாமிக்கு கிடைத்த துப்பின் அடிப்படையில் வெள்ளிக்கிழமையன்று சிறப்புப் போலீஸ் படை போலி மருத்துவர் ஆனந்தியை மடக்கியது. 5 ஆண்டுகளில் ஆனந்தி 4வது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 வாரங்களாக கருவுற்ற தாய் ஒருவர் பொதுச் சுகாதார மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்து கொண்டிருந்தவர் திடீரென 12வது வாரம் முதல் மருத்துவமனைக்கு சோதனைகளுக்காக வருவதை திடீரென நிறுத்தி விட்டார்.
இதனையடுத்து அவரைத் தேடிச் சென்ற சுகாதார அதிகாரிகளுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது, காரணம் அவரது கர்ப்பம் கலைக்கப்பட்டது தெரியவந்தது.
சட்டவிரோட கிளினிக் ஒன்றில் அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதையடுத்து இதற்கு உதவிய இரண்டு புரோக்கர்களின் எண்களை அதிகாரிகள் எப்படியோ பெற்று மாவட்ட ஆட்சியருக்கு அளித்தனர். இந்த சட்டவிரோத கிளினிக் கள்ளக்குறிச்சியில் செயல்பட்டது தெரியவந்தது.
மாவட்ட ஆட்சியர் சிறப்பு போலீஸ் படை ஒன்றை அமைத்து ஆனந்தியைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தலைமையில் இந்த தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் விரித்த வலையில் இரண்டு இடைத்தரகர்களும் சிக்கினர், இதில் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர். விசாரணையில் ஆனந்தி என்பவர்தான் இதற்கு கிங்பின் என்பது தெரியவந்தது.
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 15 ஆண்டுகளில் 16,000 சட்ட விரோதக் கருக்கலைப்புகளைச் செய்துள்ளார் ஆனந்தி. கடைசியாக 2018, டிசம்பரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் 3 மாதங்களுக்கு முன்பாக ஜாமீன் பெற்ற ஆனந்தி கள்ளக்குறிச்சியில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக கிளினிக் திறந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT