Published : 19 Oct 2019 09:58 AM
Last Updated : 19 Oct 2019 09:58 AM

மோடி-ஜின்பிங் இடையே பாலமாய் திகழ்ந்து கோவைக்கு பெருமை தேடித்தந்த மதுசூதன்!

ஆர்.கிருஷ்ணகுமார்

அண்மையில் சீன அதிபர் ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டபோது, இருவருக்குமிடையே மொழிபெயர்ப்பாளராய் சிறப்பாகச் செயல்பட்டு, இரு தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்றவர் மதுசூதன்(34). இவரது சகோதரியும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். கோவைக்கே பெருமை தேடித் தந்த மதுசூதனின் பெற்றோர் கோவை வடவள்ளியில் வசித்து வருகின்றனர்.

மதுசூதனின் தந்தை என்.ரவீந்திரன், காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய் நிர்மலதா, மின் வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மதுசூதனின் தங்கை பிரியதர்ஷினியும் ஐ.எஃப்.எஸ். தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார்.
கோவை லிசிக்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை பயின்ற மதுசூதன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. முடித்தார். 2006-ல் மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்த மதுசூதன், 2007-ல் ஐ.எஃப்.எஸ். (இந்திய அயல்பணி சேவை) அதிகாரியாகப் பொறுப்பேற்றார். முசௌரி, டெல்லியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர், 2009-ல் சீன நாட்டின் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலை செயலராகப் பொறுப்பேற்றார். பின்னர் இரண்டாம் நிலை, முதல்நிலைச் செயலராக பதவி உயர்வு பெற்றார். இடையில் இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்திலும் பணியாற்றினார். மீண்டும் சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார். இவரது மனைவி டாக்டர் அன்னபூர்ணா, மகன் இஷான். குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

தற்போது டெல்லியில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அயல்பணி செயலர் அலுவலகத்தின் (எஃப்.எஸ்.ஓ.) துணைச் செயலராகப் பணிபுரிந்து வருகிறார். கோவையில் உள்ள மதுசூதனின் பெற்றோர் ரவீந்திரன், நிர்மலதாவை சந்தித்தோம்.

5 மொழியில் தேர்ச்சி...

“சிறு வயது முதலே மதுசூதன் நன்றாகப் படிப்பார். இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் பொது அறிவு நூல்களை நிறைய படிப்பார். குறிப்பாக, வரலாறு சம்பந்தமான நூல்களை ஆர்வமுடன் விரும்பிப் படிப்பார். சிறு வயது முதலே மக்கள் சேவையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் கொண்ட மதுசூதன், மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஐ.எஃப்.எஸ்.-ஐ தேர்ந்தெடுத்தார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி மற்றும் சீனாவின் மாண்ட்ரின் மொழியில் மதுசூதன் தேர்ச்சி பெற்றவர்.

ஐ.எப்.எஸ். தேர்ச்சி பெற்ற பிறகுதான் இந்தி கற்றுக்கொண்டார். அதேபோல, ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள், ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சீனா நாட்டில் அதிகம் பேரால் பேசப்படும் மாண்ட்ரின் மொழியை மதுசூதன் கற்றுக்கொண்டார். பின்னர், மாண்ட்ரின் மொழியில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழியை அறிந்து விளக்கும் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். அப்படியே மொழி பெயர்ப்பதைக் காட்டிலும், பொருளையும், கருத்தையும் உணர்ந்து, பேசுபவரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மொழி பெயர்த்துப் பேசுவது முக்கியமாகும். வெளியுறவுத் துறையில் உயரதிகாரிகளே இப்பணியை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மாண்டரின் மொழியில் வல்லவரான, எளிதாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டு பேசக்கூடிய மதுசூதன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் உஹான் நகரில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பின்போதும், மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

அதேபோல, இந்திய குடியரசு துணைத் தலைவராக இருந்த முகம்மது ஹமீத் அன்சாரி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகள் சீனா சென்றபோதும், மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டுள்ளார். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார்.

பொதுவாகவே, மதுசூதன் பத்திரிகை யாளர்களுக்குப் பேட்டியளிப்பது கிடையாது. முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதால், எங்களிடம்கூட பல்வேறு விஷயங்களைத் தெரிவிக்க மாட்டார். அவர் சென்னை வந்த பிறகுதான், எங்களது மருமகள் சொல்லி, அவர் மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களிடையே மொழிபெயர்ப்பாளராக செயல்பட உள்ளார் என்பது தெரியும். ஏற்கெனவே, பிரமதர் உள்ளிட்டோருக்கு மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில், குறிப்பாக மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்ட பின்னர்தான், மதுசூதன் குறித்து வெளியில் தெரிந்தது.தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு, பாராட்டிப் பேசியது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருந்தது. எங்களது மகள் பிரியதர்ஷினி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தில், மியான்மர் நாட்டு விவகாரத் துறையில் அண்டர் செகரட்டரியாக இருக்கிறார்.

நாளிதழ், நல்ல புத்தகங்கள் படிப்பது அவசியம்!

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, சத்தியம் தவறாமை, விடாமுயற்சியைக் கற்றுத்தருவது அவசியம். தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்த சொல்லித்தர வேண்டும். இந்து நாளிதழ் மற்றும் நல்ல புத்தகங்களை படிக்கச் செய்ய வேண்டும். ஒரு குறிக்கோளை நிர்ணயித்து, கடினமாக உழைத்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ஐ.எஃப்.எஸ். போன்ற படிப்புகள் குறித்து தமிழக மாணவ, மாணவிகளிடம் அதிக விழிப்புணர்வும் ஏற்பட வேண்டும்” என்றனர்.

குறிப்பாக, வெளியுறவுத் துறையில் துணைச் செயலர் அந்தஸ்தில் இருப்பவர்களை மொழிபெயர்ப்பாளராக அழைப்பது கொஞ்சம் குறைவுதான். ஆனாலும், மாண்ட்ரின் மொழியில் வல்லவரான மதுசூதன் மத்திய அரசின் அழைப்பின்பேரில் பிரதமர் மோடிக்கு மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தார். இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே மொழிபெயர்ப்பாளராக இருக்கும் கடினமான பணியையும் மிகுந்த கவனத்துடனும், சிறப்பாகவும் மேற்கொண்டு, பிரதமரின் பாராட்டைப் பெற்ற மதுசூதன், கோவையைச் சேர்ந்தவர் என்பதில் கொங்கு மண்டலத்தவருக்கு பெருமையான விஷயம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x