Published : 19 Oct 2019 07:40 AM
Last Updated : 19 Oct 2019 07:40 AM

அண்ணா நகர் டவர் பூங்காவில் ஆக்கிரமித்துள்ள தனியார் கிளப் கட்டுமானங்களை இடிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சென்னை 

சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் தனியார் கிளப் நிர்வாகம் ஆக்கிரமித்து 31 ஆயிரம் சதுர அடியில் கட்டியுள்ள கட்டுமானங்களை மாநகராட்சி இடிப்பதற்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை அண்ணா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான டவர் பூங்கா உள்ளது. இந்த வளாகத்துக்குள் அண்ணா நகர் டவர்ஸ் கிளப் என்ற பெயரில் தனியார் கிளப் செயல்படுகிறது. பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தை கிளப் நிர்வாகம் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டுமானங்கள் கட்டியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2012-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த நிலையில், இதுதொடர் பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கிளப் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள 31 ஆயிரம் சதுர அடி நிலத்தை உடனடியாக கையகப்படுத்தவும், உரிய திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கிளப் நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கிளப் நிர்வாகம் தரப்பில், ‘‘அண்ணா நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சிறுவர்களின் விளையாட்டு திறனை வளர்ப்பதற்காக அந்த கிளப்பில் உள்ளரங்க விளையாட்டு மைதானங்கள் உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த உள்ளரங்க மைதானங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர். எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.

இதற்கு, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, அண்ணா நகர் டவர்ஸ் கிளப் நிர்வாகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்த பூங்கா நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்திவிட்டனர்.

எனவே, தற்போதுள்ள சூழலில் அதில் தலையிட்டு தடை விதிக்க முடியாது’’ என்று உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x