Published : 18 Oct 2019 07:58 PM
Last Updated : 18 Oct 2019 07:58 PM

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள்; சித்தா, ஆயுர்வேத, யுனானி படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்

சென்னை

நீட் தேர்வில், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ‘கட் ஆப்’ மதிப்பெண்ணைக் குறைத்து, குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவர்களைச் சேர்க்கவேண்டும் என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட கல்லூரிகளில் மொத்தம் 394 நிர்வாக இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 555 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடம் ஒதுக்கப்பட்டாலும், வெறும் 116 பேர் மட்டுமே நிர்வாக இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 278 இடங்களில் மாணவர்கள் சேராததால், அவை காலியாக உள்ளன.

கடந்த 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆனால், ‘நீட்’ தேர்வில் ‘கட் ஆப்’ மதிப்பெண் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல், அதிக இடங்கள் காலியாக உள்ளதால், ‘கட் ஆப்’ மதிப்பெண்ணைக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான காலி இடங்கள் வீணாகி விடக்கூடாது என்பதற்காக, நீட் தேர்வில் ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை விட குறைவாக மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்பவேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றமும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது.

நீட் தேர்வில், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ‘கட் ஆப்’ மதிப்பெண்ணைக் குறைத்து, குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவர்களைச் சேர்க்கவேண்டும்.

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளில் சேருவதற்கு கடைசி நாளாக வருகிற நவம்பர் 15 ஆம் தேதி என்று நிர்ணயிக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை கடிதம் கொடுத்தும், அக்கடிதங்கள் இதுவரை பரிசீலிக்கப்படாமல் உள்ளன.

எனவே, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை, தமிழகத்தில் காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கான இடங்களில் சேர்த்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நவீன்பாரதி என்பவர் தொடுத்துள்ள வழக்கிலும் உயர் நீதிமன்றம் மத்திய - மாநில அரசுகளுக்கு அறிவிக்கை அனுப்பி உள்ளது”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x