Published : 18 Oct 2019 07:03 PM
Last Updated : 18 Oct 2019 07:03 PM

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் மறுத்தாரா?- முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தை ஏற்க ஆளுநர் மறுத்து முதல்வரிடம் தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம், ''நீதிமன்றம் இதில் தலையிடாது. மாநில அரசும் ஆளுநரும் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் இது'' என்று தெரிவித்தது. இதனை அடுத்து தமிழக அரசு சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.

தீர்மானத்தின் மீது முடிவெடுக்க பல அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைத்தன. ஆனாலும் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் 7 பேர் விடுதலையில் முடிவெடுக்கவேண்டிய ஆளுநர், விடுதலை முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் முதல்வரிடம் அதை ஆளுநர் சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இதனையடுத்து ஆளுநரின் முடிவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து முதல்வர் தெளிவுபடுத்தவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதல்வரிடம் தெரிவித்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x