Published : 18 Oct 2019 04:45 PM
Last Updated : 18 Oct 2019 04:45 PM
விழுப்புரம்
ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து அதிமுகவினர் கொள்ளையடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று (அக்.18), விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஏழுசெம்பொன், கொசப்பாளையம், பழைய கருவாச்சி ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் கலந்துரையாடினார்
அப்போது, அம்மக்களிடையே ஸ்டாலின் பேசும்போது, "ஜெயலலிதாவின் இறப்புக்கு நான்தான் காரணம் என முதல்வர் பழனிசாமி கூறுகிறார். தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார்ந்துகொண்டு ஆவியோடு பேசினார். உங்கள் இறப்பில் மர்மம் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம்!
தைரியம் இருந்தால் என்மீது வழக்குப் போடுங்கள். நான்தான் காரணம் என்றால் என்னைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துங்கள்!
ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து கொள்ளையடிக்கிறார்கள். இதுவரைக்கும் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி இருக்கிறார்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT