Published : 18 Oct 2019 08:59 AM
Last Updated : 18 Oct 2019 08:59 AM

புள்ளிமானை விழுங்க முயன்ற மலைப்பாம்பு: அரூர் அருகே பரபரப்பு

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் புள்ளிமானை மலைப்பாம்பு விழுங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரூர் அருகே அண்ணாமலைப்பட்டி என்ற கிராமத்தில் வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் நேற்று காலை புள்ளிமான் ஒன்று மேய்ச்சலுக்கு வந்துள்ளது. அப்போது, அப்பகுதியில் புதரில் இருந்த மலைப்பாம்பு ஒன்று புள்ளிமானை வளைத்துப் பிடித்து விழுங்க முயன்றது. இதனால் புள்ளிமான் பலத்த ஓசையுடன் கத்தியுள்ளது. இதைக் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற விவசாயி ஓசை வந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, சுமார் 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒரு புள்ளிமானை விழுங்க முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டுள்ளார்.

இதுகுறித்து உடனே வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதி மக்களும் தகவல் அறிந்து அங்கு திரண்டனர். மனிதர்கள் அதிகம் திரண்ட நிலையில் புள்ளிமானை இறுகச் சுற்றியிருந்த மலைப்பாம்பு தனது பிடியை விடுவித்து புதருக்குள் சென்று மறைந்தது.

இருப்பினும், ஏற்கெனவே மலைப்பாம்பு சுற்றி வளைத்து இறுக்கியதால் புள்ளிமான் உயிரிழந்தது.

புள்ளிமானின் உடலை வனத்துறையினர் மீட்டு முறைப்படி அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x