Published : 17 Oct 2019 04:44 PM
Last Updated : 17 Oct 2019 04:44 PM

தமிழகத்தில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’; பள்ளிக் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது: தடுக்க ஆலோசனை கூறும் அரசு மருத்துவர்

மதுரை

ஆண்டுதோறும் பருவமழை காலங்கள் தொடங்கும்போதும், முடியும்போதும் பரவும் ஒரு சீசன் கண் நோய், 'மெட்ராஸ் ஐ'. சென்னையில் இந்த நோயை ஏற்படுத்தும் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் ‘மெட்ராஸ் ஐ’ என்றழைக்கப்படுகிறது.

‘மெட்ராஸ் ஐ’ நோய் சென்னையில் அதிகமாக பரவியநிலையில் தற்போது தென் மாவட்ங்களில் இந்த நோய் பரவத்தொடங்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகளில் ‘மெட்ராஸ் ஐ’ நோயாளிகள் சிகிச்சைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகளை இந்த கண் நோய் அதிகம் பாதிக்கிறது. காரணம், இந்த நோய் தற்காப்பு, முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு குறித்து அவர்களுக்குத் தெரிவதில்லை. பெற்ரோரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த நோய் வந்துவிட்டால் கண் வலியும், கூச்சமும் குழந்தைகளைத் துன்புறுத்தும்.பெரியவர்கள், குழந்தைகள் வித்தியாசமில்லாமல் இந்நோய் எளிதாக மற்றவர்களுக்கு பரவும்.

அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு மேல், நோயாளிகளுக்கு இந்த நோய் நீடிப்பதில்லை. ஆனால், அந்த ஐந்து நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களை படாதபாடு படுத்திவிடும்.

கண்ணின் உட்புறத்தில் எரிச்சலை அதிகமாக உணர்வார்கள். பள்ளிகள், பணிபுரியும் இடங்களில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ வந்து விட்டாலே, அடுத்தடுத்து தாமதிக்காமல் மற்றவர்களையும் இந்த நோய் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக ஏசி அறை அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் ஒருவருக்கு வந்தால் உடன் பணியாற்றும் மற்றவர்களுக்கு இந்நோய் விரைவாகத் தொற்றிக் கொள்ளும்.

கிராமங்களில் ‘மெட்ராஸ் ஐ’ வந்தால் கண்ணுக்கு ரொம்ப நல்லது, கண் சுத்தமாகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால், தானாக வந்த இந்த நோய் தானாக போய்விடும் என்று மருத்துவமனைகளுக்கு செல்வது கிடையாது. குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்வு இல்லாமல் பெட்டிக்கடைகளில் விற்கும் ‘பிதுக்கு மருந்து’ என்ற கண்வலி மருந்தை வாங்கி கண்ணில் போட்டுக் கொள்வார்கள். ஆனால், தற்போதுதான் ‘மெட்ராஸ் ஐ’ நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வர ஆரம்பித்துள்ளார்கள்.

அரசு மருத்துவரின் ஆலோசனைகள்..

அவர்களுக்கு கண் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை, ஆலோசனைகள் என்ன? என்பது குறித்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவர் யூ.விஜய சண்முகத்திடம் கேட்டோம்.

அவர் கூறுகையில், ‘‘கண்களில் இருந்து நீர் வடியும் என்பதால் கைக்குட்டை அல்லது டவல் கையில் வைத்திருப்பதும் நல்லது. மெட்ராஸ் ஐ ‘கன்ஜங்டிவிட்ஸ்’(Conjunctivitis) என்ற வைரஸ் மூலம் பரவுகிறது.

மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்களில் கண்ணிலிருந்து வரும் திரவத்தில் இருந்து காற்றுமூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் எளிதாக பரவுகிறது. குடும்பத்தில், அலுவலகத்தில் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுவதைத் தடுக்க நோயாளிகள் கைகளை கழுவுதல், தாங்கள் பயன்படுத்தும் தலையனை, டவல், கர்சீப், பென் மற்றும் படுக்கைகளை மற்றவர்களுக்கு பயன்படுத்த வழங்கக்கூடாது.

‘மெட்ராஸ் ஐ’ பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அது மற்ற குழந்தைகளுக்கு பரவ காரணமாகிவிடும். கண் எரிச்சல் இருப்பதால் நீச்சல் குளம், பொது இடங்களுக்கு விளையாட அனுப்பக்கூடாது. கண் சிவந்து, எரிச்சல் அடைந்தாலோ, கண்களில் நீர் வழிந்தாலோ உடனடியாக கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தும் கண் சொட்டு மருந்து போடுவதே இதற்கு முறையான சிகிச்சை. தனிப்பட்ட சுகாதாரமே இந்த நோயை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மெட்ராஸ் ஐ’ நோயை கண்டறியும் வசதி, அதற்கான சிகிச்சைகள் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்டிப்பாக பெட்டிக்கடைகளில், மெடிக்கல் ஸ்டோர்களில் விற்கும் பிதுக்கு மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. அது கண்களுக்கு அலர்ஜி அல்லது வேறுசில தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x