Published : 17 Oct 2019 03:50 PM
Last Updated : 17 Oct 2019 03:50 PM

கதைத் திருட்டு விவகாரம்: ‘பிகில்’ பட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்குத் திரைக்கு வர உள்ள ‘பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணியில், பெண்கள் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பிகில்’, ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பு மற்றும் மிகுந்த பொருட்செலவுக்கு இடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்ததாகவும் உதவி இயக்குநர் கே.பி.செல்வா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், அட்லீ இயக்கும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடைய கதையை ஒத்திருப்பதை அறிந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகவும், அந்தப் புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே கதைத் திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ளமுடியும் என கூறி தன்னுடை புகாரை நிராகரித்ததால், 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்குத் தடை கோரியிருந்தார்.

இயக்குநர் அட்லீ, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராகச் சேர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த விவகாரம் காப்புரிமை தொடர்பாக இருப்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதால், உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக கே.பி.செல்வா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓரிரு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக உதவி இயக்குநர் ஏ.பி.செல்வா தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதே நேரத்தில், தங்கள் தரப்பை கலந்து ஆலோசிக்காமல் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாதென தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த 14-ம் தேதி உதவி இயக்குநர் செல்வா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கே.பி.செல்வா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 15-ம் தேதி நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் அட்லீ மற்றும் உதவி இயக்குநர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ’பிகில்’ படத்தின் கதை, 2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில்தான் பதிவு செய்துள்ளார் என அட்லீ தரப்பில் வாதிடப்பட்டது.

காப்புரிமை மீறியதாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கூறவில்லை. பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

தான் விளம்பரம் மற்றும் பணத்துக்காக வழக்கு தொடரவில்லை. படப்பிடிப்பு தொடங்கும்போதே கதை என்னுடையது என்று வழக்குப் பதிவு செய்தேன் என உதவி இயக்குநர் கே.பி.செல்வா தரப்பில் வாதிடப்பட்டது.

தங்கள் தரப்பு பதிலைக் கேட்காமல், வழக்கை வாபஸ் பெறுவதாக உதவி இயக்குநர் தரப்பு கூறியதை கீழமை நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டது சரியல்ல என அட்லீ தரப்பில் வாதிடப்பட்டது.

கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி பட நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்கும் முன், வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் கீழமை நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி சுரேஷ்குமார், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் எடுத்த முடிவு சட்டவிதிகளுக்கு உட்பட்டதாக உள்ளதா? என முடிவெடுக்க இருப்பதாக கூறி வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆவதால் அடுத்த வாரத்தில் ஒருநாள் தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x