Published : 17 Oct 2019 10:07 AM
Last Updated : 17 Oct 2019 10:07 AM

பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு 

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் பி.காளிராஜுக்கு பணி நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.

சென்னை

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் பி.காளிராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் பி.காளிராஜை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் நியமித்துள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு இப் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றுவார்.

31 ஆண்டுகள் ஆசிரியர் பணி

பேராசிரியர் காளிராஜ் 31 ஆண்டுகள் ஆசிரியப்பணியில் அனுபவம் பெற்றவர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரிதொழில்நுட்ப மையத்தின் ஐசிஎம்ஆர் மருத்துவ விஞ் ஞானியாக உள்ளார். அவர் பல்க லைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவர்.

ஏற்கெனவே, அண்ணா பல் கலைக்கழக பொறுப்பு துணை வேந்தராகவும், டீன், உயிரி தொழில் நுட்பத்துறை தலைவ ராகவும், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக 20 ஆண்டுகளாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் தேசிய சுகாதார மையம், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்பணிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவர் 69 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன், 42 முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு, இந்திய உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி சொசைட்டியின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x