Published : 17 Oct 2019 08:33 AM
Last Updated : 17 Oct 2019 08:33 AM

கொலை வழக்கு சாட்சிக்கு மிரட்டல்: சென்னை அரசு கல்லூரி மாணவர்கள் 25 பேர் கைது

திருவள்ளூர்

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை மிரட்டியது தொடர்பாக சென்னை அரசு கல்லூரி மாணவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் அருகே வெள்ளவேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

2 கொலை சம்பவங்கள்

அந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு தங்கராஜ் கொலை செய்யப்பட்டார். அதேபோல் தங்கராஜின் சகோதரர் வெங்கட்ராமனும் கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த 2 கொலை சம்பவங்கள் தொடர்பாக ராஜேஷ் தரப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வெங்கட்ராமன் கொலை வழக்கு விசாரணை, திரு வள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெ.எம்-1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், ராஜேஷுக்கு எதிராக சாட்சி சொல்ல மேல்மனம்பேடு பகுதி யைச் சேர்ந்த ஒருவர், நேற்று முன் தினம் மதியம் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரை, சென்னை, அண்ணா சாலை பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் 25 பேர் சுற்றி வளைத்து, சாட்சி சொல்லக்கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வெங்கட் ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரில் ஒருவரின் உறவினர் மகன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வந்து சாட்சியை மிரட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரி மாண வர்கள் 25 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x