

சென்னை
சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்கு தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை எந்த அமர்வு விசாரிப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகளை மீட்கவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் சிறப்பு அதிகாரி யாக ஓய்வுபெற்ற போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேலை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு நியமித்தது. அவருக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறி டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை பொன் மாணிக்கவேல் தொடர்ந்தார். இந்த அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், திடீரென இந்த அமர்வை கலைத்து அப்போதைய தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த அவ மதிப்பு வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது, அவர்கள் இந்த வழக்கை விசாரிக்க மறுத்து பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.
அதன்படி, பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத் தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த அவமதிப்பு வழக்கை மீண்டும் பழைய அமர்வே விசாரிப்பதா அல்லது வேறு அமர்வுக்கு மாற்றுவதா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.