Published : 16 Oct 2019 05:20 PM
Last Updated : 16 Oct 2019 05:20 PM
விழுப்புரம்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செம்மேடு கிராமத்தில் நேற்று முன்தினம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பில் மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் வருவதை அறிந்து கிராம மக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன், மேள, தாளங்கள் இசைக்கும் இடத்துக்குச் சென்றார். இசைக்கேற்ப ஆட்டம் போட்டார்.
இதை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தன்னுடைய தொகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி ஏராளமானோர் இறந்து வரும் நிலையில் வாக்கு சேகரிப்பில் தொகுதி மக்களை மறந்து அமைச்சர் ஆட்டம் போடுவதா என அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
2017-ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வழிந்தது. இதற்கு சாயக்கழிவுகளால் ஏற்பட்ட மாசுபாடே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால்தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது என அமைச்சர் கருப்பணன் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT