Last Updated : 16 Oct, 2019 02:46 PM

 

Published : 16 Oct 2019 02:46 PM
Last Updated : 16 Oct 2019 02:46 PM

சிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று மோடி கூறியது சரியானதல்ல: நல்லகண்ணு கருத்து

திருநெல்வேலி

நதி வளம் பொதுவான சொத்து. சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என்று மோடி கூறியது சரியானதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி பிரச்சாரத்துக்காக வந்த அவர், திருநெல்வேலியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர், "நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல், இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுக அரசு தனது அதிகார பலத்தை வைத்துக்கொண்டு, மத்திய அரசின் துணையோடு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது.

மத்திய அரசு ரயில்வே, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளில் தனியாரை அனுமதிக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இது இந்திய நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கச் செய்யும். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் சார்பில் ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அரசு சொல்வதையெல்லாம் கேட்டு அதிமுக அரசு செயல்படுத்துகிறது. இது தவறானது. நீட் தேர்வை ஆரம்ப காலத்தில் இருந்தே திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்த்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்த்தார். ஆனால், இப்போதைய அதிமுக ஆட்சி நீட் தேர்வை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது. நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவிகளை தீவிர சோதனை செய்தனர். இருப்பினும் ஆள் மாறாட்டம் செய்து, மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியான நீட் தேர்வை தமிழக அரசு ஆதரிப்பது தவறானது.

பொறியியல் துறை மாணவ, மாணவிகளுக்கு பகவத்கீதையை கட்டாய பாடமாக அறிவித்தனர். இதை எல்லா கட்சிகளும் எதிர்த்தன. இப்போது, விருப்ப பாடமாக படிக்கலாம் என்கின்றனர்.

தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவித்தது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு அதிமுக அரசு செயல்படுவது சரியானதல்ல.

குடிமராமத்து பணிகள் சரியான முறையில் நடைபெறவில்லை. தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறாததால் காவிரி நீர் இன்னும் கடைமடை வரை செல்லவில்லை. செழிப்பான பகுதிகளும் பயிர் செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்த நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது.

மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை அதிமுக அரசு செய்து வருகிறது.

நம்பியாறு, கருமேனியாறு, பச்சையாறு பகுதிகளில் அதிகமான மணல் கொள்ளை நடந்துள்ளது. மணல் கொள்ளை, மதுபானக் கடை மூலம் வருமானம் பெறுவதை மட்டுமே கொள்கையாக வைத்துள்ளனர்.

மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க திமுக ஆட்சியில் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளனர். சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். அதிமுக ஆட்சி நீடித்தால் தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் பாதிப்பு ஏற்படும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவறானது. மக்களும் பணம் வாங்கக் கூடாது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.

நதி வளம் பொதுவான சொத்து. சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என்று மோடி கூறியது சரியானதல்ல"

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x