பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிஐ விசாரணையை கண்காணிப்போம்: உயர் நீதிமன்றம் 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிஐ விசாரணையை கண்காணிப்போம்: உயர் நீதிமன்றம் 
Updated on
1 min read

சென்னை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சிபிஐ விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்ட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சிபிஐ தரப்பில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை தொடங்கியது. இதுவரை 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் இடைக்கால குற்றப்பத்திரிக்கையை கடந்த ஆண்டு செப் மாதம் 23-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது..

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் நவம்பர் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in