Published : 16 Oct 2019 11:37 AM
Last Updated : 16 Oct 2019 11:37 AM

ஈழத்தமிழர் பற்றி பேசும் தகுதி வைகோவுக்கு மட்டுமே உண்டு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி

ஈழத்தமிழர் பற்றி பேசும் தகுதி வைகோவுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நேற்று (அக்.15) ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சீமானைவிட நான் ஆவேசமாகப் பேசுவேன். ஏன் மைக்கை கடித்துத் துப்பிவிடுவேன். எங்கே வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று சீமான் பேசுகிறார்.

ஆனால், விடுதலைப் புலிகள் பற்றி ஈழத்தமிழர்கள் பற்றி பேசும் தகுதி கொண்ட ஒரே எதிர்க்கட்சித் தலைவர் வைகோதான். வைகோ ஈழத் தமிழர்களுக்காகப் போராடியுள்ளார். அவர் எங்கேயும் கையேந்தியதில்லை.

வைகோ இன்றுகூட எங்களை விமர்சிக்கிறார். இருந்தாலும் அவரைப் பற்றி நாங்கள் அறிவோம். அவர் பேச்சில் நியாயம் உண்டு. சீமான் பேச்சில் நியாயமில்லை" என்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி சீமான் பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இக்கருத்தை முன்வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x