Published : 16 Oct 2019 10:05 AM
Last Updated : 16 Oct 2019 10:05 AM

வனவிலங்குகளை உயிர்சேதமின்றி விரட்ட அதிக சத்தம் எழுப்பும் ‘ஒலி துப்பாக்கி’ வடிவமைப்பு: கெம்பகரை அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

அதிக ஒலி எழுப்பி வன விலங்குகளை விரட்டும் வகையில், கெம்பகரை அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்துள்ள ஒலி துப்பாக்கி குறித்து கிருஷ்ணகிரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ஆட்சியர் பிரபாகருக்கு செயல்விளக்கம் அளித்த மாணவர்.

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி 

விளைநிலங்களுக்குள் புகும் வன விலங்குகளை உயிர்சேத மின்றி அதிக ஒலி எழுப்பி விரட்ட, கெம்ப கரை அரசுப் பள்ளி மாணவர்கள் ‘ஒலி துப்பாக்கி’ என்ற புதிய கருவியை வடிவமைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லை அருகே அமைந்துள்ளது. மாவட்டத்தில் 1.45 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியும், 115 காப்புக்காடுகளும் உள்ளன. வனப்பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றி, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் யானைகளால், தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, ஓசூர், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் பயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி உள்ளிட்டவற்றால் நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இதனைத் தவிர்க்க காட்டுப்பன்றி களைச் சுட விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு களாக உள்ளது. மேலும், வன விலங்குகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டுகின்றனர். இதில் சில நேரங்களில் வனவிலங்குகளுக்கு காயம் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் கெம்பகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாசு இல்லாத ஒலி துப்பாக்கியை வடிவமைத்துள்ளனர். கிருஷ்ணகிரி யில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ‘ஒலி துப்பாக்கி’ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதுதொடர்பாக கெம்ப கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் லாரன்ஸ் கூறியதாவது:

எங்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் செல்வகுமார், சந்தியா, அன்பரசு ஆகியோர் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் முருகன் உதவியுடன் ‘ஒலி துப்பாக்கி’யை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் விளைநில பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகள், காட்டுப்பன்றிகள், பறவைகளை, உயிர் சேதமின்றி அதிக ஒலியெழுப்பி விரட்ட முடியும்.

வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தியே ஒலி துப்பாக்கியை தயார் செய்யலாம். இதற்காக பிளாஸ்டிக் குழாய்கள்(பிவிசி), காகிதங்கள், வாசனைத் திரவியம் ஆகியவை போதும். காகிதங்கள் மூலம் குண்டுகள் தயார் செய்துக் கொள்ளலாம். பிளாஸ்டிக் குழாயில் ஒரு பக்கம் அடைத்து வைக்கப்படும். இடையே ஒரு துளையிட்டு அங்கு காஸ் லைட்டர் பொருத்தப்படும். மற்றொரு புறத்தில் 2 இன்ச் பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டு, காகித குண்டுகள் நிரப்பி வைக்கப்படும். இப்போது, சிறிதளவு வாசனை திரவியத்தை குழாயில் செலுத்தி, காஸ் லைட்டர் மூலம் தீப்பற்ற வைத்தால், அதன் அழுத்தத்தின் காரணமாக காகித குண்டுகள் அதிக ஒலியுடன் வெளியேறும். சுமார் 50 முதல் 100 அடி தூரம் காகித குண்டுகள் செல்லும். இந்த வெடிச்சத்தத்தால் வனவிலங்குகள் ஓடிவிடும். அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒலி துப்பாக்கி தயாரிக்க ரூ.150 மட்டுமே செலவாகிறது. 100-க்கும் அதிகமான முறை காகித குண்டுகளை வெடிக்கச் செய்து ஒலி எழுப்பலாம். சுற்றுச்சூழலும் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டறிந்துள்ள ஒலி துப்பாக்கியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வனத்துறையினரை ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x