

சென்னை
நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த, ரவுடி அழகுராஜாவின் கூட்டாளி கவுதம், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
சென்னை ராயப்பேட்டை, ஜாம்பஜாரைச் சேர்ந்தவர் மலர்கொடி(51). எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மகன் அழகுராஜா(31). இவர் மீது 9 குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதி மலர்கொடி தனது மகன் அழகுராஜா மற்றும் ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(20), விஜயகுமார்(20) உள்ளிட்ட மேலும் சிலருடன் ஆட்டோவில் எழும்பூர் சென்றார். பின்னர், அதே ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இதை மற்றொரு கும்பல் நோட்டம் விட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் அருகே பிளாக்கர்ஸ் சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது மற்றொரு ஆட்டோவில் வந்த கும்பல் இவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில் மலர்கொடி காயம் அடைந்தார். அப்போது அழகுராஜா, ஆட்டோவில் தயாராக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து அந்த கும்பல் மீது வீசினார்.
இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. தகவல் அறிந்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். காயம் அடைந்த மலர்கொடி உள்ளிட்டோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து அழகுராஜா, அவரது தாயார் மலர்கொடி மற்றும் ஆதரவாளர்கள் மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அழகுராஜாவின் கூட்டாளி எனக் கூறப்படும் பல்லாவரத்தைச் சேர்ந்த கவுதம் தலைமறைவாக இருந்தார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று அவர் சரண் அடைந்ததார்.
பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அரிவாளால் தாக்குதல் நடத்திய கும்பலையும் போலீஸார் தேடி வருகின்றனர்.