Published : 15 Oct 2019 01:02 PM
Last Updated : 15 Oct 2019 01:02 PM

சீமான் பேச்சு மிகவும் தவறானது: முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

மதுரை

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது எனக் கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன்.

அதேபோல், பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த தகவலையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தேச ஒற்றுமைக்கான மக்கள் தரிசன யாத்திரை இன்று (அக்.15) மதுரையில் தொடங்கியது. இதனை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

சீமான் பேச்சு தவறானது..

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு குறித்த கேள்விக்கு, "ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது. ராஜீவ் கொலை நடந்தபோது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதோ அதை மீண்டும் உருவாக்கக்கூடிய வகையில் கருத்து கூறியிருக்கிறார்" என்றார்.

தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிப்பா?

பிரதமர் மோடி- சீன அதிபர் வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த தகவல் பற்றிய கேள்விக்கு, "பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியில் யார் பங்கேற்க வேண்டும் என்ற பட்டியலை தயாரித்ததில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கமாக பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் இடம் பெறுவதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை.

ஒரு முறை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மறுமுறை பார்க்காத நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.இந்த நடைமுறை மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, இது தெரியாத நிர்வாகிகள் தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள்.

இதை சர்ச்சையாக்கி பாஜக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறது. பாஜகவில் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்கள் எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. எச்.ராஜா தவறாக சித்தரிக்கப்படுகிறார்" என்றார்.

திமுக அடிமையாகத்தான் இருந்ததா?

அதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, "தமிழகத்தில் பாஜகவின் அடிமை ஆட்சியாக அதிமுக உள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்.

அப்படியென்றால் 1998-ல் எங்கள் ஆட்சியில் அங்கம்வகித்த திமுக, அப்போது எங்களிடம் அடிமையாக இருந்ததா? எனக் கேட்க விரும்புகிறேன்" என்று வினவினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x