Published : 15 Oct 2019 11:08 AM
Last Updated : 15 Oct 2019 11:08 AM
புதுச்சேரி
தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டி வியாபார அரசியல் செய்யும் சீமானுக்கு ராஜீவ் காந்தியை விமர்சிக்கத் துளிகூட தகுதி கிடையாது என, புதுச்சேரி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு புதுச்சேரி காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் நேற்று (அக்.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேசத்தை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்ற இணையற்ற தலைவர், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை ஏற்றம் பெறச் செய்த ஒப்பற்ற தலைவர் ராஜீவ் காந்தியைக் கொன்று புதைத்தது எங்கள் கூட்டம்தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமேடையில் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
அரசியல் விளம்பரத்துக்காக வெற்றுக் கூச்சலிடும் சீமானுக்கு, எங்கள் தலைவரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?
நமச்சிவாயம்: கோப்புப்படம்
இந்திய நாட்டின் ஈடில்லா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனத்துரோகி எனக் கூறும் சீமானுக்கு, தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டி வியாபார அரசியல் செய்பவருக்கு, எங்கள் அன்புத் தலைவரைப் பற்றி விமர்சிக்கத் துளிகூட தகுதி கிடையாது.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும். அரசு தீவிர விசாரணை செய்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சீமானையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்.
ஏற்றமிகு தலைவர் ராஜீவ் காந்தியை தரமற்ற முறையில் விமர்சித்த சீமானின் கருத்தை தமிழர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்" என அதில் கூறப்பட்டுள்ளது.
செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT