Published : 14 Oct 2019 08:07 PM
Last Updated : 14 Oct 2019 08:07 PM

கட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை

சேலம்

சேலத்தில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த உறவினரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம், சூரமங்கலம், ஜாகீர்ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சரவணன்(40) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சரவணனின் மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால், தாய் மாதம்மாளுடன் வசித்து வருகிறார்.

சரவணனின் தம்பி முருகேசன். இவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவியும் பிரிந்து சென்று, பரமத்திவேலூரில் இரண்டாவது மகனுடன் வசித்து வருகிறார். முருகேசன் தனது மூத்த மகன் 15 வயது சிறுவனுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார்.

சரவணன், முருகேசன் அவரது 15 வயது மகன் மூவரும் கட்டிட வேலைக்கு செல்வதுண்டு. அப்போது, மது போதையில் சரவணன், முருகேசனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முருகேசன் தனது சகோதரர் சரவணனை அடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.

நேற்று இரவு சரவணன் மதுபோதையில் தம்பி முருகேசன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் 15 வயது சிறுவன் மட்டும் இருந்துள்ளார். தம்பி மகனை மதுபோதையில் ஆபாசமாக திட்டியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த முருகேசன் மகன் பெரியப்பா சரவணனை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சரவணனை கொலை செய்த முருசேகனின் மகனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x