Last Updated : 14 Oct, 2019 03:23 PM

 

Published : 14 Oct 2019 03:23 PM
Last Updated : 14 Oct 2019 03:23 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் சிபிஐக்கு மேலும் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ டிஎஸ்பி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி, 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என 2018 ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பதிவான 222 வழக்குகளையும் ஒரே வழக்காக சேர்த்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ கடந்த ஆண்டு அக். 8-ல் வழக்கு பதிவு செய்தது. 160 தொழில்நுட்ப ஆவணங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, நூறு ஆவணங்களுக்கு பதில் பெறப்பட்டுள்ளது. 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. இதனால் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் இரு மாத அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து விசாரணையை டிச. 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து. அன்றையதினம் துப்பாக்கிச்சூடு வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x