Published : 14 Oct 2019 03:35 PM
Last Updated : 14 Oct 2019 03:35 PM
சென்னை
தமிழக காங்கிரஸ் எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் 28 ஆண்டுகளைக் கடந்து சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.14) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது!
பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதல்வரே பரிந்துரை செய்கிறார். மத்திய அரசும் அதை ஏற்கிறது. இன உணர்வு என்றால் என்ன? என்பதை பஞ்சாப் காங்கிரஸிடம் தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும்!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா? என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும்," என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT