Published : 14 Oct 2019 03:29 PM
Last Updated : 14 Oct 2019 03:29 PM

உள்ளூர் பால் விற்பனைத் தடையை ரத்து செய்க: இரா.முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

உள்ளூர் பால் விற்பனைத் தடையை ரத்து செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (அக்.14) வெளியிட்ட அறிக்கையில், "தொடக்க நிலை பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பால் முழுவதையும் ஒன்றியங்களுக்குக் கொடுத்து விட வேண்டும், உள்ளூரில் விற்பனை செய்யக்கூடாது என பால்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தாராளமாக பால் உற்பத்தி செய்யும் காலங்களில், பால்வள ஒன்றியங்கள் தொடக்க நிலை சங்கங்களில் பால் கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, உள்ளூர் விற்பனையை அதிகப்படுத்தும்படி நிர்பந்திப்பதும், பால் உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்து விடும் காலங்களில் உள்ளூர் விற்பனை செய்யக் கூடாது எனத் தடை விதிப்பதும் கடுமையான முரண்பாடாகும்.

பால் நுகர்வோர் தொடர்ந்து ஒரே இடத்தில் பால் வாங்குவதையை விரும்புவார்கள் என்பது இயல்பானது என்பதை பால்வளத்துறை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பால் உற்பத்தியாளர்கள் தொடக்கநிலைக் கூட்டுறவு சங்கங்கள் உள்ளூரில் விற்பனை செய்யக் கூடாது எனத் தடை விதித்து பால்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x