Published : 14 Oct 2019 10:49 AM
Last Updated : 14 Oct 2019 10:49 AM
விழுப்புரம்
ராஜீவ் காந்தி கொலை குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (அக்.13) சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசும்போது, "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார்.
ராஜீவ் காந்தி கொலை குறித்துப் பேசிய சீமான்மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டி போலீஸில் நேற்று இரவு புகார் அளித்துள்ளார்.
போலீஸில் புகார் அளிக்கும் காங்கிரஸ் கட்சியினர்
இதனைத் தொடர்ந்து இன்று விக்கிரவாண்டி போலீஸார் சீமான் மீது, வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சீமானின் இந்தப் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT