

திருநெல்வேலி
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கேடிசி நகர் பகுதியில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால் இத் தொகுதியின் தீவுப்பகுதியாக இது காட்சியளிக்கிறது.
திருநெல்வேலி மாநகராட்சி யின் எல்லையில் இருக்கும் கேடிசி நகரை மிக அருகில் இருக்கும் பாளையங்கோட்டை சட்டப் பேரவை தொகுதியின் கீழ் இடம் பெறச் செய்யாமல், 30 கி.மீ. தொலை வில் உள்ள நாங்குநேரி தொகுதி யுடன் இணைத்ததன் விளைவாக இப்பகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் உருப்படியாக நடைபெறாமல் இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது.
குடிநீரின்றி திண்டாட்டம்
கேடிசி நகரில் உள்ள குறிஞ்சி நகர், அன்னை நகர், பாரதி நகர், இஸ்மாயில் நகர், செல்வின் நகர், மீனாட்சிசுந்தரம் நகர், விஜயா துர்க்காபுரி நகர், அய்யப்பன் நகர் ஆகியவற்றில் உள்ள அரசு அங்கீ காரம் பெற்ற மனைகளில் ஆயிரக் கணக்கான மக்கள் குடியிருக் கின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதி கள் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் சாலை வசதி கூட செய்து தரப்படவில்லை. கைக் கெட்டும் தூரத்தில் தாமிரபரணி பாய்ந்தாலும் இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட இன்னும் கிடைக்கவில்லை.
இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைவாக இருப் பதால் அன்றாட தேவைகளுக்கு கூட மக்களுக்கு ஆழ்துளை கிணறு களில் தண்ணீர் கிடைப்பதில்லை.
பெருகி வரும் குடியிருப்பு களுக்கு ஏற்ப குப்பைகளை அகற்ற போதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
பேருந்து வசதி குறைவு
இங்கு அரசு பேருந்துகள் காலை, மாலையில் சுமார் 12 முறை வந்து செல்கின்றன. கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத் திடம் வலியுறுத்தியும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இவ் வழியாக இயக்கப்படும் மினி பேருந்துகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த பேருந்து நடத்து நர்கள், ஓட்டுநர்களுக்கு இடையே அடிக்கடி ஏற்படும் மோதலால் பயணிகளின் பயணம் தடைபடு கிறது.
குறைந்த மின்னழுத்தம்
குடியிருப்புகள் விரிவடையும் நிலையில் அதற்கேற்ப டிரான்ஸ்பார்மர்களை மின் வாரியம் அமைக்காததால் மாலை 6 மணிக்கு பிறகு குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன.
அக்கறை காட்டவில்லை
குடியிருப்பு பகுதியில் உள்ள தெருக்களில் இருந்து மங்கம்மாள் சாலை மற்றும் டார்லிங் நகர் பகுதிக்கு இணைப்புச் சாலை வசதி முழுமையாக இல்லாததால் மழைக்காலத்தின் போது வாகனங்கள் செம்மண் சகதியில் சிக்கி விபத்து ஏற்பட்டிருந்தது.
நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில வாரங்கள் முன்பாக கேடிசி நகரில் அவசர கோலத்தில் ஒருசில தெருக் களில் தார்ச்சாலை அமைக்கப் பட்டது. ஆனால், தரமாக அமைக்கா ததால் 6 மாதங்களுக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் சேதமடையும் சூழல் நிலவுகிறது.
இத்தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் பெரும்பாலும் கேடிசி நகர் பகுதியில் அக்கறை காட்டுவதில்லை என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் நாங்குநேரி தொகுதியை மறுவரையறை செய்து கேடிசி நகர் பகுதியை பாளையங்கோட்டை தொகுதியுடன் இணைத்து வளர்ச்சி பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை இப்பகுதி மக்கள் முன்வைக்கிறார்கள்.