Published : 12 Oct 2019 04:34 PM
Last Updated : 12 Oct 2019 04:34 PM

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் திமுகவை விட மக்கள் முனைப்புடன் இருக்கின்றனர்: ஸ்டாலின்

சென்னை

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் மக்கள் முனைப்புடன் இருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்.12) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "தமிழக இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்பதுதான் பொதுமக்களிடம் நான் வைக்கும் பணிவன்பான வேண்டுகோள்.

அகத்தை முகத்தில் அப்படியே பிரதிபலிப்பதுபோல, பொதுமக்கள் மகிழ்ச்சியோடு தலையசைக்கிறார்கள். 'வணக்கம்' சொல்லி வாழ்த்துகிறார்கள். 'கை' கொடுக்கிறார்கள். செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். வாயார வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். நமக்கு நல்ல நம்பிக்கை ஊட்டுகிறது ; அவர்களிடமிருந்து வெளிப்படும் ஆரவாரமான ஆதரவும் அசைக்கமுடியாத தீர்மானமும்.

அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் காண்கிற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தொடர்ச்சியான பரப்புரையை மேற்கொண்டிருக்கிறோம்.

பொதுக்கூட்டம், வேன் பிரச்சாரம் இவையல்லாம் தேர்தலில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள்தான் எனினும், நான் மிகவும் விரும்புவது திண்ணைப் பிரச்சாரத்தைத்தான். காரணம், அது வெறும் பரப்புரை அல்ல; சொற்பொழிவு அல்ல; நம்மை நம்பி வாக்களிக்கும் பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை முகத்துக்கு முகம், இதயத்துக்கு இதயம் அறிந்துகொள்ளக்கூடிய நேரடியானதும் நெருக்கமானதுமான உரையாடல்.

மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை, அந்த உரையாடலின் போது - அவர்கள் வெளிப்படுத்தும் தமிழ்மொழியில் மட்டுமல்ல, அவர்களின் உடல்மொழியிலும் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அவலகரமான - அடிமைத்தனமான ஆட்சிக்குப் பாடம் புகட்ட தங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக வாக்காளர்கள் நிச்சயமாக நம்புகிறார்கள். அதற்கான நாளினை எதிர்பார்க்கிறார்கள்.

திமுக எப்போதும் ஜனநாயக வழியில் செயல்படும் இயக்கம் என்பதையும், அந்த உணர்வைத்தான் அண்ணாவும் கருணாநிதியும் எப்போதும் நமக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் என்பதையும் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது; அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள். அதேநேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்பதில் நம்மைவிட அவர்கள் ஆர்வமாகவும் முனைப்பாகவும் இருக்கிறார்கள்.

அடிப்படை வசதிகளைக்கூட செய்து தர முடியாத ஓர் ஆட்சி, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம் எதுவும் சரியாக இல்லை. நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்காகப் போய் நின்றால், 'இன்று போய் நாளை வா' என்ற பதிலே கிடைக்கிறது.

முதியோர் உதவித்தொகை கிடைப்பதில்லை. ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித்திட்டம் முடக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தப் பணியையும் செய்யாமல் கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் என்பது மட்டுமே ஆட்சியாளர்களின் ஒரே செயல்பாடாக இருக்கிறது.

மக்கள் இதனை வெறும் இடைத்தேர்தலாகப் பார்க்கவில்லை. தங்களை அலட்சியப்படுத்துகிற - அவமதிக்கிற - அலைக்கழிக்கிற ஆட்சியாளர்களைத் தண்டிப்பதற்கான தக்கதொரு வாய்ப்பாக வாக்களிக்கும் நாளினை எதிர்பார்க்கிறார்கள்.

மக்களிடம் தெளிவாக வெளிப்படுகிற அந்த உணர்வினை திமுகவின் தொண்டர்கள் களத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

இடைத்தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியின் அமைச்சரவைப் பட்டாளம் இரு அணிகளாகப் பிரிந்து, முழு அதிகார பலத்துடனும் முழுவீச்சிலான அதிகார துஷ்பிரயோகத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளையும் - தங்களுக்கான ஏவல் ஆட்களாக ஆட்சியாளர்கள் மாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல நேரங்களில் ஒருதலைபட்சமான நிலையில் இருந்தாலும், ஜனநாயகத்தைக் காப்பாற்றிட வேண்டும் என்ற நோக்கில், இன்னமும் அந்த அமைப்பின் மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

தேர்தல் களத்தில் வேறு எவர் மீது வைக்கின்ற நம்பிக்கையைவிடவும், வாக்காளர்களாகிய பொதுமக்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்திட வேண்டும். களநிலவரப்படி, வாக்காளர்கள் நம் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். விக்கிரவாண்டி தொகுதி கழக வேட்பாளர் புகழேந்திக்கும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை, அவர்கள் தருகின்ற ஆதரவை வாக்குகளாக மாற்றுகின்ற வகையில் திமுகவின் பணி சீராகவும் சிறப்பாகவும் அமையவேண்டும்.

அதுபோலவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும். வீடு வீடாகச் செல்லுங்கள்; ஒவ்வொரு வாக்காளராகச் சந்தியுங்கள்; நமது அணிக்கு அவர்களின் வாக்குகளை உறுதி செய்யுங்கள். ஒரு 'கை'யில் ஒன்றிணைந்திருக்கும் விரல்களை விரித்தால், எப்படி 'உதயசூரியன்' போல அமைகிறதோ, அதுபோல கழகத்தின் அனைத்து நிலையிலுள்ளவர்களும் ஒருங்கிணைந்து, விரிவான அளவில் தேர்தல் களத்தில் வேகமாகப் பணியாற்றுங்கள்.

தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் உரிய மதிப்பளித்து, உடன் அழைத்துச் செல்லுங்கள்.

அரசியல் தோழமை என்பது எப்படி அமையவேண்டும் என்பதை, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய நாடு முழுமைக்கும் உணர்த்தியது, தமிழ்நாட்டில் திமுகவின் தலைமையில் அமைந்த மகத்தான வெற்றிக் கூட்டணி. அந்தத் தோழமை உணர்வு இடைத்தேர்தல் களத்திலும் தொடர்ந்து நீடித்து, வெற்றியினைப் பெற்றிடவேண்டும்.

மக்கள் நமக்குத் தரத்தயாராக இருக்கின்ற வெற்றியைத் தட்டிப் பறித்திட ஆட்சியாளர்கள் சாம-பேத-தான-தண்டம் என தந்திர வழிகள் அனைத்தையும் கையாள்வார்கள்; அதிகார அத்துமீறல்களில் ஈடுபடுவார்கள். கொள்ளையடித்துக் குவித்து வைத்திருக்கும் பணத்தால் வெற்றியை விலைபேசி வாங்கிடலாம் என நினைப்பார்கள்.

அவர்களின் அத்தனை முறைகேடுகளையும் தில்லு முல்லுகளையும் எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் ஆயுதம் உழைப்பு. அந்த உழைப்பினை ஒரு சிறிதும் சிதறவிடாமல் தேர்தல் களத்தில் காட்டுங்கள். நாங்குநேரி - விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்," என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x