Published : 11 Oct 2019 11:32 AM
Last Updated : 11 Oct 2019 11:32 AM
விழுப்புரம்
பொதுப்பணித்துறை அமைச்சருக்கு நந்தன் கால்வாய் எங்கு இருக்கிறது என்று தெரியாது என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவினருக்கு பணம் மட்டும்தான் குறிக்கோள். ஓட்டுக்கு ரூ.8 ஆயிரம் வரை கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அன்னியூரில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று மாலை (அக்.10) திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:
"விக்கிரவாண்டி தொகுதியில் 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் புகழேந்தி வெற்றி பெறுவார். சிலர் அரசியலுக்காக சாதியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் திமுக சாதிக்கு அப்பாற்பட்ட திராவிடக் கட்சி.
பணபலம், அரசு அதிகாரிகள் பலம் ஆகியவற்றால் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அது எங்கள் தலைவர் ஸ்டாலின் இடத்தில் எடுபடாது. திமுக தான் வெற்றி பெறும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தவர் தலைவர் கருணாநிதி. அந்த இலவச மின்சாரத்தை எடுக்க ஒருமுறை ஜெயலலிதா முயற்சி செய்தார். அவரிடம் சண்டை போட்டுத் தடுத்தவன் நான்.
பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தலைவர் கருணாநிதி தான் கொடுத்தார். இதை பாமக நிறுவனர் ராமதாஸால் மறுக்க முடியுமா? திமுக கூட்டணியில் பாமக இருந்த சமயத்தில், அன்புமணி ராமதாஸுக்குப் பதவி கொடுக்க மறுத்தபோது, அவர்கள் கேட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை சோனியா காந்தியிடம் சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தவர் தலைவர் கருணாநிதி.
அதிமுகவினருக்கு பணம் மட்டும்தான் குறிக்கோள். ஓட்டுக்கு ரூ.8 ஆயிரம் வரை கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.
நான் அமைச்சராக இருந்த போது இந்த நந்தன் கால்வாயை நேரில் வந்து பார்த்தேன். ஆனால் தற்போது பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள முதல்வருக்கு நந்தன் கால்வாய் எங்கு இருக்கிறது என்பது தெரியாது. நான் சத்தியம் செய்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டத்தை முடிப்பேன்".
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT