Published : 11 Oct 2019 10:16 AM
Last Updated : 11 Oct 2019 10:16 AM

சூலூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமான வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை

கோவை

கோவை சூலூர் அருகே, விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமான வழக்கு தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள எஸ்.குமாரபாளையத்தி லுள்ள மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி கவிதா. இவர்கள் இருவரும் அங்குள்ள விசைத்தறி குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதில் மகனும், 5 வயதில் ஷாமினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 5-ம் தேதி கணவர், மனைவி இருவரும், குழந்தைகள் இருவரையும் பாட்டி லட்சுமி கண்காணிப்பில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

கடந்த 5-ம் தேதி அங்குள்ள கோயில் அருகே, விளையாடிக் கொண்டிருந்த ஷாமினி வீடு திரும்பவில்லை. எங்கேயோ மாயமாகி விட்டார். இது குறித்து ஜெயக்குமார் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாயமான சிறுமி ஷாமினியை கண்டுபிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறுமியை கடைசியாக பார்த்ததாக கூறிய அதே பகுதியை சேர்ந்த இளைஞர் உட்பட 3 பேரிடம் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். ஆனால், அவர்களுக்கு சிறுமி மாயமான விவகாரத்தில் தொடர்பு இல்லை எனத் தெரியவந்ததும் விடுவித்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும் போது,‘‘இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க ஒரு தனிப்படையினர், தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். மாயமான சிறுமியின் புகைப்படம் வெளியிட்டு, அது குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என காவல்துறை அதிகாரிகளின் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x