Published : 09 Oct 2019 05:35 PM
Last Updated : 09 Oct 2019 05:35 PM

தாயைப் பிரிந்த பெண் குட்டி யானை: மீண்டும் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முயற்சி

ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாயைப் பிரிந்த பெண் குட்டி யானையை மீண்டும் வனப்பகுதியில் யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் குட்டி யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய விளைநிலத்தில் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

இந்நிலையில், குட்டி யானையை மற்ற யானைக்கூட்டம் சேர்க்காததால் மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறிய குட்டி யானை, வனச்சாலையில் சுற்றித் திரிந்தது. அதனை வனத்துறையினர் மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். இம்மையத்தில் வனத்துறை கால்நடை மருத்துவக்குழுவினர் குட்டி யானையைப் பரிசோதித்து தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் கொடுத்து பராமரித்து வந்தனர்.

பெண் குட்டி யானை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு சென்று பராமரிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்த நிலையில் இன்று (அக்.9) அதிகாலை 3 மணியளவில் வனத்துறையினர் குட்டி யானையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று யானைக்கூட்டத்துடன் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லால் கூறுகையில், "பண்ணாரி மற்றும் பவானிசாகர் வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் யானைக்கூட்டத்தில் இந்தக் குட்டி யானையை சேர்ப்பதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்தக் குட்டி யானையை யானைக்கூட்டத்துடன் சேர்த்தபின் குட்டி யானையின் நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் கண்காணிக்கும் பணியை மேற்கொள்வர்" என்றார்.

கோவிந்தராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x