Published : 09 Oct 2019 11:15 AM
Last Updated : 09 Oct 2019 11:15 AM
விழுப்புரம்
இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை இடதுசாரிகள் வெளிப்படுத்த வாய்ப்பு இருப்பதாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பூரிக்குடிசை கிராமத்தில் நேற்று (அக்.8) இரவு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதகமில்லை. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ஒரு சுதந்திரமான அமைப்பு. மத்திய மாநில அரசுகள் அழுத்தம் தொடர்பான எந்த சந்தேகமும் தேவையில்லை. இருந்தபோதும் பழைய முறையில் தேர்வு கொண்டு வர வேண்டும் என்று அரசுத் தரப்பில் ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
திமுகவிடம் இருந்து தேர்தல் நிதி பெற்ற விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இருந்த நல்ல அபிப்ராயம் போய்விட்டது. நீண்டகாலப் பாரம்பரியம் கொண்ட பிம்பம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான திமுக நல்லெண்ண நோக்கில் இல்லாமல் காட்டிக் கொடுக்கும் விதத்தில் இதைச் செய்துள்ளது. இதிலிருந்தே நல்லவர்கள் யார் என்பதை கம்யூனிஸ்டுகள் உணர்வார்கள். பொதுவுடைமைக் கட்சியினர் இதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
திமுகவினரால் நம்பிக் கெட்டவர்கள் அதிகம். அதிமுகவை நம்பி வாழ்ந்தவர்கள் அதிகம். கம்யூனிஸ்டுகள் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது, அவர்கள் எந்த நிதி உதவியும் பெறாமல் தேர்தல் பணியாற்றினார்கள். இந்தச் சம்பவத்தால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்றே தெரிகிறது," என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT