Last Updated : 08 Oct, 2019 05:18 PM

 

Published : 08 Oct 2019 05:18 PM
Last Updated : 08 Oct 2019 05:18 PM

சென்னையில் போதுமான குடிநீர் இருப்பு: ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட குடிநீர் நிறுத்தம்

சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்ட ரயில் வேகன்

வேலூர்

சென்னையில் போதுமான குடிநீர் இருப்பு இருப்பதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் இன்றுடன் நிறுத்தப்பட்டது.

சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீரைக் கொண்டு வர தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, இத்திட்டத்துக்காக ரூ.65 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

அதன்படி, காவிரி கூட்டுக் குடிநீர் கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. தினந்தோறும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பல்வேறு காரணங்களால் முதலில் நாள்தோறும் 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 23-ம் தேதி முதல் நாள்தோறும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து செய்து வந்தனர். தினந்தோறும் காலை ஒரு ரயில், மாலையில் ஒரு ரயில் என நாள் ஒன்றுக்கு 2 ரயில்களில் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், சென்னை நகர மக்களுக்குப் பருவமழை கைகொடுத்து வருவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. இது மட்டுமின்றி கிருஷ்ணா நதிநீரும் சென்னைக்கு அனுப்பப்பட்டதால் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்தது.

இதைத்தொடர்ந்து, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் தண்ணீர் எடுத்துச்செல்லும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்து அதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது. அதன்படி, சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் இன்று (அக்.8) காலையுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

"தமிழக அரசு உத்தரவுப்படி சென்னைக்கு கடந்த ஜூலை 12-ம் தேதியில் இருந்து இன்று வரை காவிரி கூட்டுக் குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 159 தடவை, அதாவது 39 கோடியே 75 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் போதுமான தண்ணீர் இருப்பு இருப்பதாலும், வீராணம், பூண்டி, செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நீர் இருப்பு போதுமான அளவு இருப்பதால் காவிரி கூட்டுக் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மெட்ரோ நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. இதையேற்ற காவிரி கூட்டுக் குடிநீர் சென்னைக்கு அனுப்பும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மட்டுமின்றி வேறு எந்த மாநிலத்திலும் தண்ணீர் தேவை என்றால் ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த 90 ஊழியர்கள், 17 பொறியளார்கள் அந்தந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் ஜோலார்பேட்டை 5-வது யார்டில் உள்ள குடிநீர் ஏற்றி வந்த பைப்புகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ராட்சத பைப்புகள், தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார்கள் உள்ளிட்டவை அப்படியே இருக்கும்"

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x