Published : 08 Oct 2019 10:01 AM
Last Updated : 08 Oct 2019 10:01 AM

உலகம் உற்றுநோக்கி பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர்: ஜி ஜின்பிங் தமிழக வருகைக்கு ஸ்டாலின் வரவேற்பு

சென்னை

தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்.8) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவைப் போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப்பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள்தொகை கொண்டதுமான சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை மனமார வரவேற்கின்றேன்.

சீன நாட்டுடன் நெருங்கியத் தொடர்புகொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்துக்கு அவர் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்று சீனப்புரட்சி. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கையில் தாங்கிப் பிடித்துக்கொண்டு லட்சக்கணக்கான மக்களுடன் சீனத் தலைவர் மாவோ நடத்திய மகத்தான பேரணியை அடுத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புரட்சி, 1949 ஆம் ஆண்டு சீனத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, அதைச் செஞ்சீனமாக மாற்றி, உலகத்தையே திரும்பிப் பார்த்திட வைத்தது.

உழைக்கும் வர்க்கம் முன்னின்று தீரத்துடன் நடத்திய அந்த மாபெரும் புரட்சியின் எழுபதாம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை, கடந்த அக்டோபர் 1 ஆம் நாள் நடத்திவிட்டுத்தான் சீன அதிபர் தமிழகம் வருகிறார். அதே 1949 ஆம் ஆண்டுதான், தமிழகத்தில் திமுக என்கின்ற மாபெரும் சமூகப் புரட்சி இயக்கமும் அண்ணாவால் தொடங்கப்பட்டது. திமுகவும் தனது 70-வது ஆண்டு விழாவைப் போற்றிக்கொண்டு இருக்கிறது.

"ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்று, மானுடத்துக்கு அரிய தத்துவத்தைத் தந்த மாவோ; கருணாநிதியால் முத்தான தமிழில் ஏற்றிப் போற்றிப் பாராட்டிப் புகழப்பட்டவர் மாவோ; அவர் வழியில் புயலாக வீசிய அந்த சீனப் புரட்சிதான், அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் உருவான சமூக, அரசியல்,பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.

அத்தகைய தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது உண்மையில் பெருமைக்குரியதாகும்.

தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல; குடியரசு காலத்துக்கும் காலனிய காலத்துக்கும் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் இருந்து தொடர்கிறது.

கி.மு.காலக்கட்டத்திலேயே சீன நாணயங்கள் இருந்த இடம், தஞ்சை மண். சீன தேசத்துக்கு வர்த்தகம் செய்த தமிழ் மன்னர் ராஜராஜ சோழன்.

ஏற்றுமதி இறக்குமதித் தொடர்புகள் பலப்பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னதாகத் தமிழகத்துக்கும் சீனாவுக்கும் உண்டு. அதனால்தான் சீனப் பயணியும் புத்தத் துறவியுமான யுவான் சுவாங் தமிழகத்தைக் காண வந்தார். அவர் வந்து சென்ற மிக முக்கியமான ஊர், பல்லவர் காலத் தலைநகரமான காஞ்சிபுரம். அந்த மாவட்டத்துக்குத்தான் இன்றைக்கு சீன அதிபர் வருகிறார்.

தமிழகத்தின் கலைநகரம் மாமல்லபுரம். கல்லில் கலைவண்ணம் கண்டு, கவிதைகளாகச் செதுக்கிய ஊர். பல்லவ நாட்டின் மிக முக்கியமான துறைமுகம் இருந்த கடற்கரை நகரம் அது. மாமல்லபுரத்தை உலகப் பண்பாட்டுச் சின்னமாகக் கருதி 'யுனெஸ்கோ' விருது தந்துள்ளது. இந்தியத் தொல்லியல் நகரங்களில் தலையாயது மாமல்லபுரம். சிற்பங்கள், மண்டபங்கள், தேர்கள், ரதங்கள், கட்டுமானக் கோயில்கள், கடற்கரைக் கோயில், புடைப்புச் சிற்பங்கள் என சிலை நகர் அது. அக்கலை நகருக்குத்தான் சீன அதிபர் வருகிறார்.

உலகம் உற்றுநோக்கி, பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது தமிழர்கள் அனைவருக்கும் பெருமைதரத் தக்கது என்ற அடிப்படையிலும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அவரை , திமுகவின் சார்பில், மனமார வரவேற்கின்றேன்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது. இந்திய - சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே" என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்துக்கும் ஒளி தருவதாய் அமையட்டும் என்றும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x