Published : 06 Oct 2019 10:35 AM
Last Updated : 06 Oct 2019 10:35 AM
ராஜ ராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டு கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 ஐம்பொன் சிலைகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் நேற்று மீட்கப்பட்டன.
35 ஆண்டுகள் தஞ்சையை ஆட்சிபுரிந்த ராஜ ராஜ சோழன், தனது ஆட்சியின் 20-ம் ஆண்டில் பெரிய கோயிலை கட்டினார். 29-ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ராஜ ராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய 2 ஐம்பொன் சிவன் சிலைகள் கோயிலுக்கு வழங்கப்பட்டன.
பெரிய கோயிலில் இருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன இச் சிலைகள், தற்போது தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூட அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று காலை தஞ்சாவூர் கலைக்கூடத்துக்கு வந்தனர். 3 மணி நேரம் கலைக்கூடத்தில் ஆய்வு செய்த பிறகு, இந்த இரு சிலைகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சொந்தமானவை. இவை காணாமல் போனது தொடர்பாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் 2018-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காப்பாட்சியர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, 2 சிலைகளையும் எடுத்துச் செல்ல சிவக்குமார் அனுமதித்தார். பின்னர், 2 சிலைகளையும் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். வரும் 10-ம் தேதி சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதி மன்றத்தில் 2 சிலைகளையும் ஒப்படைக்க உள்ளனர்.
இதுகுறித்து, பொன் மாணிக்க வேல் கூறியதாவது: இந்த 2 சிலைகளும் 69 ஆண்டுகளுக்கு முன்பே கலைக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோயிலிலும், அரண்மனை தேவஸ்தானத்திலும் சில காலங்கள் இருந்ததாகத் தெரிகிறது.
இந்தச் சிலைகள் கோயிலில் இருந்து காணாமல் போனது தொடர்பாக சில குற்ற வழக்குகள் உள்ளன. எனவே, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, முறைப்படி மீண்டும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒப்படைக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT