Published : 06 Oct 2019 10:33 AM
Last Updated : 06 Oct 2019 10:33 AM

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஈடுபட்ட மாணவர்களிடம் கூடுதல் பணம் கேட்டு மிரட்டிய தரகர்கள்: சிபிசிஐடி விசாரணையில் தகவல்

கோப்புப் படம்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தரகர்களே மாணவர் களைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு பின்பு மற்றொருவர் மூலம் மேலும் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்துள்ளது. எனவே மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியவரை கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தேனி அரசு மருத்துவக் கல் லூரி மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தகவல் முதலில் மின்னஞ்சல் மூலமே கல்லூரி நிர்வாகத்துக்கு தெரியவந்தது.

மின்னஞ்சலில் வந்த புகார்

அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் மின்னஞ்சலில் வந்த புகார் மீது முதலில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து ஊடகங் களுக்கும், தேனி கல்லூரிக்கும் மின்னஞ்சல் மூலம் மீண்டும் புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் குழு ஒன்றை அமைத்து உதித்சூர்யாவின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவிட்டது. இதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவர் உதித்சூர்யா கல்லூரியை விட்டு வெளியேறினார்.

தேனி க.விலக்கு காவல் நிலை யத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. தனிப்படை விசாரணைக் குப் பிறகு சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இதில் உதித்சூர்யா உட்பட 4 மாணவர்கள், அவர்களது தந்தை களும் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ளனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி தரகர்கள் ரஷீத், வேதாசலம் ஆகியோரைப் போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் மின்னஞ்சலில் புகார் அளித்தவருக்கும், தரகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ரூ.2 கோடி கேட்டனர்

மாணவர்கள் ராகுல், பிரவீன் ஆகியோரிடம் ஏற்கெனவே நடத்திய விசாரணையின்போது, ஆள்மாறாட் டப் பிரச்சினை வெளியில் தெரியா மல் இருக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி தர வேண்டும் என்று சிலர் போனில் மிரட்டினர். ஆனால் அதற்கு நாங்கள் சம்மதிக்க வில்லை. அதன் பிறகுதான் போலீ ஸார் எங்களைக் கைது செய்தனர் என்று தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் மின்னஞ் சல் மூலம் புகார் அனுப்பியவரின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நவீன தொழில்நுட்பம் மூலம் இன்னொரு கணினியை இயக்கி போலியான ஐடி மூலம் புகார் அனுப்பி உள்ளது தெரியவந்தது.

வேறொருவர் மூலம் மிரட்டல்

இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸார் கூறியதாவது: தரகர்கள் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்த தரகர்கள் மற்றொருவர் மூலம் மாணவர்களை மிரட்டி மேலும் பணம் பறிக்கத் திட்டமிட்டனர்.

இதற்காக அவர்களது தந்தை யரிடம் பேரம் பேசியுள்ளனர். முதலில் யாரும் இதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் கோபமடைந்த அவர்கள் உதித்சூர்யாவை முதலில் சிக்க வைத்தனர்.

இந்த விஷயத்தைக் கூறி மற்ற மாணவர்களிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டனர். ஆனால் உதித்சூர்யா கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஒரு தவறை செய்ய வைத்து 2 விதங்களில் பணம் பறிக்க முயன்ற விவரம் தெரியவந்துள்ளது. எனவே மின்னஞ்சலில் புகார் அளித்தவரின் விவரங்களை திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த விவரம் ஓரளவு தெரியவந்துள்ளது. விசாரணை பாதிக்கும் என்பதால் அவற்றை சொல்ல முடியாது. அவரைப் பிடித்ததும் இந்த வழக்கில் மேலும் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட முழுவிவரமும் தெரியவரும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x