

மதுரை
அரசை எதிர்ப்பவர்களை சிறையில் அடைக்கும் நடைமுறை ஜனநாயக சீர்கேடு என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், "காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி 2 மாதங்கள் ஆகின்றன. இன்றைய தேதி வரை 3 முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் உள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. தொலைபேசி இன்னும் முழுமையாக செயல்படவில்லை.
எதிர்ப்பாளர்களை சிறையில் அடைப்பது காஷ்மீர் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இது ஜனநாயக சீர்கேடு. பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 47 பேர் மீது தேசதுரோக வழக்கு. எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தால் பொய் வழக்கு பாய்கிறது. ப.சிதம்பரம், சிவகுமார், சசி தரூர், சரத் பவார் போன்ற தலைவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
என் தந்தை மீதான குற்றச்சாட்டை சீலிடப்பட்ட உரையில் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி விசாரணையை நீண்ட நாள் இழுத்தடிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவின்படி என் தந்தைக்கு சைவ உணவு வழங்கப்படுகிறது. பாஜகவிற்கு மாமிச உணவு மீது வெறுப்பு என்பதால் மற்றவர்களுக்கும் மாமிச உணவை தடை செய்கிறது.
என் மீது பொய் வழக்கு போட்டு 4 தடவை ரெய்டு, 25 தடவை சம்மன், 11 நாட்கள் காவல் என நீடித்தும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை" எனப் பேசினார்.
- எஸ்.ஸ்ரீநிவாசகன்