மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: ஜனநாயகத்தின் மீதான கொடூரத் தாக்குதல்; மார்க்சிஸ்ட் கண்டனம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைக்கு தேசவிரோத வழக்கா? என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (அக்.5) வெளியிட்ட அறிக்கையில், "மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சி, 'ஜெய் ஸ்ரீராம்' ஆகியவற்றை முன்வைத்து கும்பல் வன்முறைகளும், கொலைகளும் பெருகியுள்ளதை அரசு ஆவணங்களே வெளிப்படுத்தி வருகின்றன.

தற்போது 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, இந்த வன்முறைகள் இரட்டிப்பாகியிருப்பதாக 'ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல்' அமைப்பும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அரசும், அரசு அமைப்புகளும் வன்முறையாளர்கள் மீதும், கொலைக்குற்றவாளிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை கொண்டாடும் நிலையிலும் நடந்து கொள்வது மனசாட்சியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பதற வைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட திரைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் உள்ள 49 பேர் இவற்றை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இது அனைவராலும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இந்தக்கடிதம் தேசவிரோதமானது என வடமாநிலத்திலுள்ள ஒரு நீதிமன்றம் அறிவித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதையொட்டி இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வன்முறைகளையும், கொலைகளையும், சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டிய அரசும், அரசு அமைப்புகளும் மவுனமான நிலையில் இருக்கும்போது தேசபக்தியும், மனித நேயமும், அரசியல் சட்டத்தின் மீது அக்கறையும், ஜனநாயகத்தின் மீது மதிப்பும் கொண்டவர்கள் இச்செயல்களை விமர்சிப்பதும், கண்டிப்பதும், நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் தேச பக்த செயலே. இவற்றை கொண்டாடுவதற்கும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் பதிலாக கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அரசு மற்றும் அரசு அமைப்புகள், நீதிமன்றம் ஆகியவற்றின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. மேற்கூறிய கடிதமெழுதிய மனிதாபிமானிகள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும். அந்தக் கடிதத்தை எழுதியவர்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயக உள்ளம் படைத்த அனைத்துப்பகுதியினரும் வன்முறைக்கு எதிராக கடிதம் எழுதியவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்," என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in