Last Updated : 04 Oct, 2019 02:17 PM

 

Published : 04 Oct 2019 02:17 PM
Last Updated : 04 Oct 2019 02:17 PM

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர்கள் பிரவீன், ராகுல் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தேனி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரும் தேனி குற்றவியல் நடுவர் விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் அரசு உதவி வக்கீல் நிர்மலாதேவி சார்பில் சேலம் சிறையில் உள்ள மாணவர் இர்ஃபானை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ரூபணா, மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தை ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணயை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதேபோல், மாணவர் இர்ஃபானை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் இருந்து வழக்கு குறித்த ஆவணம் கிடைத்த பிறகே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரில் சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா முதன்முதலில் கடந்த மாதம் சிக்கினார். அவரும் அவருடைய தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இதற்குப் பின்னணியில் ஒரு கும்பலே செயல்பட்டது அம்மபலமானது.

இந்த அடிப்படையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்தம் தந்தையர் கைது செய்யப்பட்டனர். மாணவர் இர்ஃபான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருடைய தந்தை முகமது சபியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x